பாம்பு பிடித்த அனுபவம் - 1

பூனாவில் எங்கள் அலுவலகம் மலை அடிவாரத்தில் இருந்ததையும் அங்கே சில பல ஜந்துக்கள் வந்து சென்று கொண்டிருந்ததையும் பற்றி எழுதி இருந்தேன். பாம்புகள் அங்கே அடிக்கடி இரவுகளில் தென்படும் ஆனால் ஒரு முறை பகலில் தண்ணீர் தொட்டி அருகே ஒரு பாம்பு சுருண்டு படுத்துக் கொண்டிருந்தது. நமக்கு தான் எல்லாத்துலையும் அறை குறை ஞானம் ஆச்சே. மெட்ராஸ் பாம்பு பூங்காவில் ராமுலஸ் விட்டேகர் எழுதிய "Common Indian Snakes" மற்றும் "A Field Guide of Indian Snakes" ஆகிய புத்தகங்களை வாங்கிப் படித்து பாம்புக்கும் மரவட்டைக்கும் வித்தியாசம் காணும் அளவுக்கு தேர்ச்சி பெற்றிருந்தேன். பாம்புகள் தென்படும் போதெல்லாம் அது எந்த பாம்பு என்று சக ஊழியர்களிடம் பீலா விட்டுக்கொண்டிருப்பேன். இதில் பெரிய காமெடி என்னவென்றால் எனக்கு "கலர் பிலைண்ட்நெஸ்" உண்டு. அதனால் சில பல கலர்களில் குழப்பம். ( பலர் கலர் பிலைண்ட்நெஸ் என்றால் கருப்பு வெள்ளை தவிர மற்ற நிறங்கள் தெரியாதா என்று கேட்டதுண்டு). பகலில் இந்த பாம்பைப் பார்த்ததும் படு குஷி ஆகி விட்டேன். அதைக் கையில் பிடித்தால் என்ன என்று தோன்றியது. பாம்பு வேறு கொஞ்சம் சிறியதாக இருந்தது கொஞ்சம் தைரியத்தை கொடுத்தது. சின்ன நாகப் பாம்பு கொத்தினாலும் அம்பேல் தான் என்றெல்லாம் அப்போது தோணவில்லை. கூட இருந்த நண்பர்கள் (? அடப் பாவிகளா) வேறு உற்சாகப்படுத்தி (உசுப்பேத்தி) விட்டார்கள். சட்டென்று சென்று அதைப் பிடித்து விட்டேன். பாம்புக்கும் பிடி படுவது அது தான் முதல் முறை போலும். 2-3 முறை என்னை கொத்துவது போல் கை அருகே வந்தது. பிறகு என்ன நினைத்தோ பரிதாபப்பட்டு விட்டு விட்டது. அப்போது தான் உதித்தது ஞானோதயம் - இனியும் பாம்பு விளையாட்டு எல்லாம் வேண்டம் என்று. சற்று தொலைவில் இருந்த புதர் அருகே விட்டு விட முடிவு செய்தேன். வேகமாக ஓடினால் மானப் பிரச்சினை வேற. அதனால் முகத்தை தைரியமாக வைத்து கொண்டு பாம்பையும் உயிரையும் கையில் பிடித்து கொண்டு சென்று அந்த புதரில் விட்டு வந்தேன். அதன் பிறகு என்னை என்னமோ சின்ன வயதிலிருந்தே பாம்புகளோடு ஒட்டி உறவாடியவன் போல ஒரு இமேஜ் உண்டானது. எங்கள் அலுவலக சமையல் பெண்மணியும் அக்கம் பக்கத்திலெல்லாம் புகழை பரப்பி விட்டாள். பிறகு பொறுமையாக ஆராய்ச்சி செய்த பொது தான் தெரிந்து கொண்டேன் - அது "Trinket Snake" வகையை சேர்ந்தது, விஷமற்றது என்று. தமிழில் "அழகு பாம்பு" என்று போட்டிருந்தது ஆனால் நான் கேள்வி பட்டதில்லை ( அவ்வளவு தெரிந்து வைத்திருந்தேன்). அதன் பிறகு பின்னொரு முறை அலுவலகத்தில் வேறு ஒரு பாம்பு பிடித்தோம். அது வேறொரு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி.

0 comments: