எங்கள் காவல் நாய்

பூனாவில் வேலை செய்து கொண்டிருந்த நாட்களில் எங்கள் அலுவலகம் ஒரு சின்ன மலையின் அடிவாரத்தில் இருந்தது. அருகில் வேறு வீடுகள் எல்லாம் அதிகம் இருக்காது. சுற்றி மரங்கள் எல்லாம் அதிகம் இல்லா விட்டாலும் செடிகள் புதர்கள் எல்லாம் நிறைய இருக்கும். நிறைய பறவைகள், பாம்புகள் (அவைகளை பற்றி விவரமாக பிறகு சொல்கிறேன்) எல்லாம் வரும். இவைகள் எல்லாம் இல்லாமல் தெரு நாய்கள் பல எங்கள் அலுவலகத்திற்கு அடிக்கடி வரும். மதிய உணவின் போது மிச்சம் ஆகும் சப்பாத்திகளை அவைகளுக்கு போட்டு நட்பு வளர்த்து வைத்திருந்தோம். அவைகளில் ஒரு நாய்கள் குடும்பம் என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு தாய் நாய் தன் குட்டிகளை கூட்டிக்கொண்டு வரும். 5 குட்டிகள் இருந்ததாக ஞாபகம். நாங்கள் போடும் சப்பாத்திகளை தன் வாயால் எடுத்து ஒவ்வொரு குட்டிக்கும் சமமாக பங்களித்து கொடுக்கும். இது போல் வேறு எந்த நாயும் செய்து நான் பார்த்தது இல்லை. குட்டிகள் எல்லாம் துரு துருவென இருக்கும். அந்தக் கூட்டம் வருவதை பார்ப்பதற்கே மிக அழகாக இருக்கும். மிகவும் ஆனந்தமாக விளையாடிக்கொண்டு மெதுவாக அவைகள் ஓடி வருவதை மிகவும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருப்பேன். மாலை 5:30 - 6:00 மணி அளவில் தினமும் வந்து கொண்டிருந்த அந்தக் கூட்டம் திடீர் என ஒரு நாள் வருவதை நிறுத்தி விட்டன. பிறகு சில நாட்கள் கழித்து குட்டிகள் மட்டும் வந்தன. மற்றவைகள் என்ன ஆயின என்ற கவலை இருந்த போதிலும் இவைகள் வந்ததே பெரிய சந்தோஷமாக இருந்தது. திடீரென ஒரு நாள் , ஒரு குட்டி மட்டும் வந்து வெளியே போட்டிருந்த பெஞ்சின் அடியில் படுத்து மிகுந்த வேதனையுடன் முனகிக்கொண்டிருந்தது. பார்த்தால் அதன் இடது பின்னங்கால் மீது ஏதோ ஸ்கூட்டர் போன்ற வாகனம் ஏறியது போல பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. அந்த குட்டி மிகவும் உடல் இளைத்து போயிருந்தது. எங்களுக்கு அந்த குட்டி உயிர் பிழைக்கும் என தோன்றவில்லை. அந்த மரண வேதனையிலும் அந்த குட்டி எங்களை தேடி வந்திருந்தது. அதன் முன்னால் ஒரு குண்டாவில் பால் ஊற்றி வைத்தோம். எத்தனை நாட்களாக பட்டினி கிடந்ததோ தெரியவில்லை, மிகவும் சிரமப்பட்டு எழுந்து வந்து அந்த பால் முழுவதையும் குடித்து முடித்தது . மாலையில் சில பிரெட் துண்டுகளை பாலில் நலைத்து கொடுத்தோம். அவற்றையும் சாப்பிட்டு விட்டு முனகிக்கொண்டே படுத்திருந்தது. காலை பார்க்கும் போது உயிருடன் இருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு துளியும் இல்லை. ஆனால் அது நாளுக்கு நாள் உடல் நிலை முன்னேறி எங்களை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. ஆனால் இடது பின்னங்கால் முழுவதும் செயல் இழந்து போனது. அடுத்த சில வாரங்களில் பழைய உற்சாகம் திரும்பியது. அது இப்போது எங்கள் அலுவலகத்தின் காவல் நாயாக மாறியது. யாராவது புதிய நபர்கள் வந்தால் அதற்கே உரிய மழலைக் குரலுடன் குரைத்துக் கொண்டு மூன்று கால்களில் வேகமாக ஓடி செல்லும். அதைப் பார்த்து வந்தவர்கள் பயந்து விடுவார்கள் ஆனால் எங்களுக்கோ சிரிப்பாக இருக்கும். இவ்வாறாக 2-3 மாதங்கள் எங்களுடன் மிகப்பிரியமாக இருந்த குட்டி ஒரு நாள் திடீரென காணாமல் போனது. எங்கள் அலுவலகத்தை விட்டு 100 மீட்டர் கூட தாண்டி போகாத அது வேறு எங்கும் சென்றிருக்க வாய்ப்பு இல்லை என்று தெரிந்த போதும் ஒரு நப்பாசையில் அக்கம் பக்கத்தில் எல்லாம் தேடினோம். எங்கள் அலுவகத்தில் சமையல் வேலை செய்து வந்த ஒருவள் தான் அதை எப்போதும் கத்திக்கொண்டே இருப்பாள். அவள் மீது தான் எங்களுக்கு சந்தேகம். அதை எங்கோ எடுத்து சென்று விட்டு விட்டாள் என்பது எங்கள் ஐயம். 8-9 வருடங்கள் கடந்திருந்தாலும் இப்போது எழுதும் போது கூட வருத்தமாக இருக்கிறது.

0 comments: