மீன் பிடித்த அனுபவங்கள்

சின்ன வயதில் இருந்தே மீன்கள் மீது எனக்கு அலாதிப் பிரியம் ஏன் என்றால் மீன்கள் மட்டும் தான் என் அப்பா வைத்துக் கொள்ள அனுமதிப்பார். பள்ளியிலிருந்து திரும்பும் போது தெருவில் ஏதாவது நாய் அல்லது பூனைக் குட்டிகள் இருந்தால் வீட்டிற்கு எடுத்து வந்து விடுவேன். என் அப்பா ஆபீஸில் இருந்து வந்த உடன் அவைகள் வெளியேற்றப்படும். எவ்வளவு தான் கெஞ்சிக் கூத்தாடினாலும் பப்பு வேகாது. அதனால் மீன்கள் மட்டும் வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்படிருந்தது. அப்போதெல்லாம் நாங்கள் குடி இருந்த வீட்டின் அருகில் இருந்த ஒரு வெற்றிடத்தில் மழை நீர் தேங்கி குளம் போல இருக்கும். அங்கே பல விதமான மீன்கள் இருக்கும் - கெண்டை, கெளுத்தி, ஜிலேபி என்று பல வகைகள். சிறுவனாக இருந்த போது அங்கே மீன் பிடித்துக்கொண்டிருக்கும் பெரிய பையன்களிடம் கெஞ்சி எதாவது ஒரு மீன் வாங்கி வந்து ஹார்லிக்ஸ் பாட்டிலில் விட்டு வைப்பேன். பின்னர் சற்று பெரியவன் ஆன பின்பு நானே தண்ணீருக்குள் இறங்கி (ரொம்ப ஆழம் எல்லாம் இல்லை, சும்மா கணுக்கால் வரைக்கும் இருக்கும் இடத்தில் தான்) மீன்கள் ஒன்றிரண்டு பிடித்து வருவேன். ஒரு முறை பள்ளியில் இருந்து வரும் போது மீன் என்று நினைத்து தவளைக் குஞ்சுகளை வாட்டர் பாட்டிலில் பிடித்து வந்து அம்மாவிடம் உண்டை வாங்கினேன். இன்னும் சற்று பெரியவன் ஆன பின்பு ஒரு சில சக குரங்குகளுடன் மயில் வாகனத்தில் ஏறி (சைக்கிள் தான்) இப்போது பாஷ் ஏரியவாகக் கருதப்படும் கொட்டிவாக்கம், நீலாங்கரை ஆகிய இடங்களுக்கு சென்று குட்டைகளில் இருந்து மீன்கள் பிடித்து வருவோம். கொட்டிவாக்கத்தில் இருந்த ஒரு குட்டையில் குராமி மீன்கள் நிறைய இருந்தது மிகப் பெரிய ஆச்சரியம். (Dwarf மற்றும் Blue குராமி). அங்கே ஒரு சில இடங்களில் கடல் நீர் உள்ளே வந்து Scat மீன்கள் வேறு இருக்கும். இதை எல்லாம் இப்போது நினைத்து பார்க்கையில் ஏதோ கனவு போல தோன்றுகிறது. நான் பள்ளி முடிக்கும் போதே வீட்டின் அருகே இருந்த குளம் மூடப்பட்டு அடுக்கு மாடி குடியிருப்புகள் வந்து விட்டன. இப்போதுள்ள குழந்தைகளுக்கு இந்த மாதிரி அனுபவம் எல்லாம் கிடைக்க வாய்ப்பே இல்லையே என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது.

1 comments:

Anonymous said...

unmaithaan, ippodhu pasangalukku ippadi oru anubhavam kidaikave kidaikathu. Namellam adirshtakkaranga. Enna solreenga?