நாய் புத்தி ?

நாய் புத்தி என்று அடிக்கடி மற்றவர்களை திட்டுவோம். எதற்காக இந்த மாதிரி திட்டுகிறோம் என்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம் ஆனால் நான் அறிந்த சில நாய்களின் குணாதிசியங்களை சொல்லுகிறேன். சிறுவனாக இருந்த போது என் பெரியம்மா டாமி என்று ஒரு பொமரேனியன் நாய் வைத்திருந்தார்கள். அவர்களுடைய வீட்டிற்கு செல்லும் போதெல்லாம் என்னை மனுஷனாகக் கூட மதிக்காது. அதை வாக்கிங் கூட்டிப் போவதற்காக இருந்த செயினை யாரவது தொடும் சத்தம் கேட்டால் எங்கிருந்தாலும் அப்படி ஒரு கூச்சல் போட்டுக் கொண்டு வரும். மனிதர்களைப் போலவே பொசெசிவ் குணம் கொண்டது. ஆனால் நாங்கள் ஊருக்கு கிளம்பும் போது மிகவும் சோகமாக ஆகிவிடும். பஸ் ஸ்டாப் செல்லும் போது அது திரும்பி வீட்டுக்கு செல்லும் படி இழுக்கும். பின்னர் அதற்கு வயதான பின்பு கேடராக்ட் வந்து சுத்தமாக கண் தெரியாமல் போய் விட்டது. அப்போதெல்லாம் மனிதர்களுக்கே கேடராக்ட் ஆபரேஷன் என்பது மிகக் கடினமான ஒரு அறுவை சிகிச்சையாக இருந்தது. அதனால் அதற்கு ஒன்றும் செய்ய இயலவில்லை. அப்போது அது மிகவும் அமைதியாக இருக்கும். அதனிடம் பேசினால் வாலை மட்டும் மெதுவாக ஆட்டிக்கொண்டிருக்கும், சத்தம் எதுவும் போடாது - பழுத்து பக்குவம் அடைந்த ஒரு ஞாநி போல இருக்கும். அடுத்து சென்னையில் எங்கள் வீட்டின் அருகே இருந்த ஒரு நாய் - பெயர் மீனா . எனக்குத் தெரிந்து தமிழ் பெயர் சூட்டப்பட்டிருந்த முதல் நாய் அது தான். இப்போதெல்லாம் நம் கிராமங்களில் கூட குழந்தைகளுக்கே தமிழ் பெயர் யாரும் வைப்பதில்லை. பரம சாதுவான மீனாவும் எங்கள் அனைவரின் செல்லப் பிராணியாக திகழ்ந்தது. என் அம்மா வீட்டின் அருகே இருக்கும் ஒரு சின்ன கோவிலுக்கு தினமும் போவது வழக்கம். தவறாமல் மீனாவும் என் அம்மாவுடன் செல்லும். சாமி கும்பிடும் போது அமைதியாக இருந்து, பரிகாரத்தை சுற்றும் போது அதுவும் சுத்தும். ( பக்திமான் போல பக்திநாய்? ) கடைசியாக என் மாமா வீட்டு கருப்பு நாய் - பெயர் கரியான். அந்த ஏரியாவின் தாதா, முடிசூடா மன்னன் எல்லாம் அவன் தான். வட்டாரத்து நாய்களை எல்லாம் கூட்டு சேர்த்திக்கொண்டு அவர்கள் பின் தொடர ஏரியாவை வளம் வருவான். வீட்டுக் காம்பவுண்டுக்குள் எதாவது பாம்பு வந்துவிட்டால் அதை மோப்பம் பிடித்து கொன்று விடுவான். விரியன் பாம்பு கடித்து பரலோகத்தின் நுழைவாயில் வரை சென்று திரும்பியும் சற்றும் வீரம் குறையாத அஞ்சா நெஞ்சன். ஆனால் எங்கள் வீட்டு கேட்டை தாண்டி வர மாட்டான். அந்த ஏரியாவுக்கு என் பெற்றோர்கள் குடி வந்த புதிதில் கேட்டைத் தாண்டி உள்ளே வந்து போர்டிகோவில் இருக்கும் ஒரு தூணின் மேல் மூச்சா போவது வழக்கமாக கொண்டிருந்தானாம். இதனை வன்மையாக கண்டித்த என் அம்மாவின் வசை வார்த்தைகளை கண்டு பயந்தோ அல்லது ரோஷம் வந்தோ எங்கள் வீட்டு கேட்டை தாண்டி இப்போதும் வருவதில்லை. கடை வீதியில் தாதா போல உலா வரும் நபர் பூ விற்கும் பாட்டியிடமோ அல்லது பெட்டி கடை வைத்திருக்கும் பெண்மணியிடமோ திட்டு வாங்குவதில்லையா அந்த மாதிரி தான். நம்மில் பலர் எத்தனை பேர் இது மாதிரி இருக்கிறோம்? இப்படிப் பட்ட நாய்களை எல்லாம் பார்க்கும் போது ஒரு வேளை நாய்கள் எல்லாம் தங்களுக்குள் "உனக்கு ஏன் இந்த மனுஷ புத்தி ?" என்று கேட்டுக்கொள்ளுமோ என்று தோன்றுகிறது.

2 comments:

*இயற்கை ராஜி* said...

:-)

இம்சை அரசி said...

//இப்படிப் பட்ட நாய்களை எல்லாம் பார்க்கும் போது ஒரு வேளை நாய்கள் எல்லாம் தங்களுக்குள் "உனக்கு ஏன் இந்த மனுஷ புத்தி ?" என்று கேட்டுக்கொள்ளுமோ என்று தோன்றுகிறது //

நல்லா சொன்னீங்கண்ணா :)))