காக்கா கதைகள் - 1

நம்மை சுற்றி எப்போதும் இருப்பதாலோ என்னவோ காக்கைகளைப் பற்றி நாம் எப்போதும் அதிகம் கண்டுகொள்வது கிடையாது. ஆனால் பறவை இனங்களிலேயே மிகவும் புத்திசாலியானது என்று கருதப்படுவது நம் காக்கையார் தான். சென்னையில் இருந்த போது என் அம்மா தினமும் மதிய உணவிற்கு பிறகு ஒரு காக்காவிற்கு ஏதாவது சாப்பிட வைப்பார்கள். தவறாமல் தினமும் அதே நேரத்திற்கு வந்து முதலில் அமைதியாக இருக்கும். ஏதாவது வேலையாக இருந்து ஆகாரம் வைக்க சில நிமிடங்கள் தாமதம் ஆனால் ஒரெ ஒரு முறை "கா" என்று கத்தும். அப்படியும் தாமதம் ஆனால் தன் மூக்கினால் ஜன்னல் கண்ணாடியை கொத்தும். வேறு ஏதாவது ரூமில் இருந்தால் மற்ற ஜன்னல்களில் சென்று இதையே செய்யும். ஒரு நாளும் சாதம் உண்ணாது, சப்பாத்தி, பூரி, தோசை இது மாதிரி ஏதாவது டிபன் ஐட்டம் மட்டும் தான் சாப்பிடும். பூனாவில் இருந்த போது தினமும் இதே மாதிரி பால்கனி சுவற்றின் மேல் மீதமாகும் ஏதாவது உணவுகளை காக்கைகளுக்காக வைப்போம். நேரம் தவறாமல் தினமும் அதே நேரத்தில் பல காக்கைகள் வரும்.நாங்களும் பந்தியில் பரிமாறுவது போல் தீரத் தீர கொஞ்சம் உணவு வைப்போம். ஒரு நாள், வீட்டில் எல்லோரும் ஊருக்கு போயிருந்தார்கள்- நானும் முந்தைய நாள் இரவு எதுவும் சமைக்கவில்லை. நேரத்திற்கு வரும் காக்கைகள் ஏமாந்து போய்விடுமே என்று எதாவது இருக்கிறதா என்று தேடினேன். பிரிட்ஜில் இருந்த பால் கோவா (பேடா) தவிர வேறு எதுவும் இல்லை. ஒரு 10 துண்டுகளை வெளியில் வைத்து விட்டு ஆபீஸ் சென்று விட்டேன். சாயந்திரம் பால்கனியில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் போது பார்த்தால் சுவற்றின் மேல் ஏதோ ஒரு காட்டுப்பூ இருந்தது. அது எப்படி அங்கு வந்ததோ தெரியவில்லை. எனக்கு என்னமோ ஒரு காக்கா தான் ஸ்வீட்டுக்கு நன்றி சொல்லி வைத்ததோ என்று ஒரு கற்பனை. ஆனால், ஒன்று மட்டும் உண்மை. நாம் செய்யுளில் படித்தது போல் உணவு உண்ணும் போது அவை மற்ற காக்கைகளை கரைந்து அழைப்பதெல்லாம் இல்லை. ஒரு வேலை சங்க காலத்தில் அவை அப்படி இருந்திருக்கலாம். மனிதர்கள் போலவே காலப் போக்கில் அவைகளும் சுய நலமும், பொறாமையும் கொண்டவைகளாக மாறி விட்டன போலும். நம் இனத்தவர் என்ன ஆனால் என்ன, எனக்கு குவாட்டரும், பிரியாணியும் கிடைத்தால் போதும் என்று நினைக்கும் இந்த காலத்தில் காக்கைகள் மட்டும் இப்படி இருப்பதில் என்ன ஆச்சரியம்?

1 comments:

சிவக்குமரன் said...

நல்லாத்தான் எழுதறீங்க. நிறைய எழுதுங்க...