பாம்பு பிடித்த அனுபவம் - 2

பூனாவில் எங்களுடைய அலுவலகம் முதலில் ஒரு மலை அடிவாரத்தில் இருந்தது. பின்னர் ஒரு அடுக்கு மாடி கட்டிடத்துக்கு மாற்றி வந்தோம். அங்கு சென்றும் என்னுடைய பாம்பு புகழ் தொடர்ந்து வந்தது. ஒரு நாள் மாலை நேரம் தம் அடிக்க சென்ற நண்பர்கள் (?) பார்க்கிங்கில் ஒரு பாம்பு சுருண்டு படுத்திருப்பதாக வந்து பிரேக்கிங் நியூஸ் கொடுத்தார்கள். இதைக் கேட்டதும் எனக்கு வில்லங்கம் வரப்போகிறது என்று புரிந்து விட்டது. உடனே அது வரை கம்ப்யூட்டரில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த நான், படு பிஸியாக இருப்பது போல் பாவ்லா பண்ண ஆரம்பித்தேன். ஆனாலும் இந்த துரோகிககள் படை சூழ கீழே செல்ல வேண்டியதாயிற்று. போகும் பொது, இது பச்சை பாம்பு போல் எனக்கு தெரிந்த, விஷமற்ற பாம்பாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். ஆனால் அதுவோ எனக்கு தெரியாத ஒரு இனமாக கறுப்பு / பிரவுன் நிறத்தில் இருந்தது. என்ன பாம்பு என்று பீலா விடலாம் என்று யோசித்து கொண்டிருந்தத போது அந்த பாம்பை என்ன செய்யலாம் என்று வேறு ஒரு விவாதம் கிளம்பியது. சுற்றி இருந்தவர்கள் எல்லாம் அதை அடித்து விடலாம் என்று சொன்னார்கள், ஆனால் என்னுடைய துரோகிகள் படையோ என்னைக் காட்டி - இவன் வெறும் கையிலயே பாம்பை பிடிப்பான் என்று கூறி பில்ட் அப் குடுக்க ஆரம்பித்து விட்டார்கள். இதைக் கேட்ட கூட்டம் படு குஷியாகி விட்டது. அதைப் பிடித்து காத்ரஜ் பாம்புப் பூங்காவிற்கு தகவல் கொடுக்கலாம் என்று ஒட்டு மொத்தமாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. பாம்பைக் கையில் பிடித்து அப்பறம் எனக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படவா? இப்போது இருட்டாகி விட்டது அதனால் கையில் பிடிப்பது நல்லதில்லை என்று ஒரு வழியாக மக்களை நம்ப வைத்தேன். அதை ஒரு பக்கெட்டினுள் செல்ல வைத்து அடைத்து வைப்பதென்று முடிவு மாற்றப் பட்டது. இதைக் கேட்ட கூட்டம் ஒட்டு மொத்தமாக கலைந்தது - என்னுடைய அலுவலக எதிரிகள் தவிர. அந்த பாம்பை பக்கெட்டினுள் செல்ல வைப்பதற்குள் நாங்கள் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லை. அமைதியாக இருந்த அது, நாங்கள் சுற்றி பக்கெட்டும் குச்சியுமாக நிற்பதை பார்த்து கடும் சினத்திற்கு உண்டானது. இவ்வளவு பெரிய சத்தத்துடன் இப்படி ஒரு பாம்பு சீர முடியும் என்று அப்போது தான் தெரிந்து கொண்டேன். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த பாம்புக்கே போர் அடித்து விட்டதோ என்னமோ, ஒரு பக்கெட்டினுள் சென்று விட்டது. அப்பாடா என்று, எடுத்து சென்று ஒரு பாத் ரூமில் வைத்தோம். பாம்பு பூங்காவிற்கு போன் செய்த போது, 2 நாட்களுக்கு பிறகு தான் வர முடியும் என்று கூறி விட்டார்கள். அது வரை எங்களுக்கு ஒரே பயம், எப்படியாவது தப்பித்து வெளியே வந்து விட்டால் என்ன செய்வதென்று. 2 நாட்கள் பிறகு ஒரு வெள்ளைக்காரர் உட்பட 3 பேர் வந்தார்கள். அவர்களில் ஒருவர் பாம்பைப் பார்த்தும் டக்கென்று கையை விட்டு எடுத்து விட்டார். அவர் கூறியது - இது Trinket Snake என்று. அடாடா, மீண்டும் ஒரு அழகு பாம்பா என்று நினைத்தேன். தெரிந்திருந்தால் நானே கையில் பிடித்திருப்பேனே? முன்னர் பிடித்தது ஒரு பாம்பு குஞ்சு போலும், அதனால் அதன் நிறம் வேறு மாதிரியாக இருந்தது. அவரிடம் இருந்து பாம்பை வாங்கி கொஞ்சம் டேமேஜ் கன்ட்ரோல் செய்து கொண்டேன். அப்படியும் எங்கள் அலுவகத்தில் என்னைத் தவிர வேறு யாரும் அந்த பாம்பை கையில் எடுக்க முன் வரவில்லை என்பதை நினைத்து மனதை தேற்றிக் கொண்டேன் - வேறு என்ன செய்ய முடியும்?

1 comments:

ஒரு தமிழன் said...

ஹா ஹா, வெள்ளைக்காரன் ஊரிலே ஒன்னும் பிடிக்கலையா?